திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.6 திருவாரூர் - திருக்குறுந்தொகை
எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்றொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்
அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே.
1
சடையின் மேலுமோர் தையலை வைத்தவர்
அடைகி லாவர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போல்இடு காடர்ஆ ரூரரே.
2
விண்ட வெண்டலை யேகல னாகவே
கொண்ட கம்பலி தேருங் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணர்க் கருளும்ஆ ரூரரே.
3
விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை உறைவது காட்டிடை
அடைவர் போல்அரங் காகஆ ரூரரே.
4
துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தித்
திளைக்குந் திங்கட் சடையிற் திசைமுழு
தளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே.
5
பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமா
விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்
அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே.
6
மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு வாங்கங் கனல்மழு மான்றனோ
டட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே.
7
தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே.
8
உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங்
கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூரெரி
அண்ட வாணர் அடையும்ஆ ரூரரே.
9
மாலும் நான்முக னும்மறி கிற்கிலார்
கால னாய அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு வேந்திய கையினார்
ஆலம் உண்டழ காயஆ ரூரரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.7 திருவாரூர் - திருக்குறுந்தொகை
கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே.
1
எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே.
2
வண்டு லாமலர் கொண்டு வார்சடைக்
கிண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க்
கண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே.
3
துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய்
என்பெ லாம்நெக்கி ராப்பக லேத்திநின்
றின்ப ராய்நினைந் தென்றும் இடையறா
அன்ப ராமவர்க் கன்பர்ஆ ரூரரே.
4
முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம்
அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர்
முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை
அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே.
5
எம்மை யாரிலை யானுமு ளேனலேன்
எம்மை யாரும் இருசெய வல்லரே
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்
கம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே.
6
தண்ட ஆளியைத் தக்கன்றன் வேள்வியைச்
செண்ட தாடிய தேவர கண்டனைக்
கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க்
கொண்டி யாயின வாறென்றன் கோதையே.
7
இவண மைப்பல பேசத் தொடங்கினாள்
அவண மன்றெனில் ஆரூர் அரனெனும்
பவணி வீதி விடங்கனைக் கண்டிவள்
தவணி யாயின வாறென்றன் தையலே.
8
நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்
காரொத் தமிடற் றர்கனல் வாயரா
ஆரத் தர்உறை யும்மணி ஆரூரைத்
தூரத் தேதொழு வார்வினை தூளியே.
9
உள்ள மேயொன் றுறுதி யுரைப்பன்நான்
வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன்
அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தவெம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே.
10
விண்ட மாமலர் மேலுறை வானொடுங்
கொண்டல் வண்ணனுங் கூடி அறிகிலா
அண்ட வாணன்றன் ஆரூர் அடிதொழப்
பண்டை வல்வினை நில்லா பறையுமே.
11
மையு லாவிய கண்டத்தன் அண்டத்தன்
கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்
ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம்
உய்ய லாமல்லல் ஒன்றிலை காண்மினே.
12
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com